பைக் மீது அரசு பஸ் மோதி 2 ஐடி ஊழியர்கள் படுகாயம்

சென்னை: சென்னை கோவூர் அடுத்த சிக்கராயபுரம், பிருந்தாவன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (30) திருவொற்றியூர், நேரு தெருவை சேர்ந்தவர் பவித்ரா (26). இருவரும் நண்பர்கள்.  இவர்கள் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் இருக்கும் சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இருவரும் நேற்று காலை 8 மணியளவில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக சென்னையிலிருந்து பெருங்குளத்தூர் நோக்கி பைக்கில் இருவரும் வந்து கொண்டிருந்தனர். பின்னர், வண்டலூர் பூங்கா சென்று மீண்டும் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, வண்டலூர் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால், திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் முன்னாள் சென்ற, பைக் மீது மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே  தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக் கொண்டிருந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின்பேரில் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் நேற்று காலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: