அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடியை தேர்வு செய்தது செல்லாது: ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்

சென்னை: கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது; பொதுச்செயலாளராக எடப்பாடியை தேர்வு செய்ததும் செல்லாது என்று அறிவித்துள்ள உயர் நீதிமன்றம், ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கட்சியின் சட்ட விதிகளுக்கு முரணாக நடத்தப்பட்டதாக கூறி அதற்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி 2  வாரங்களில் விசாரித்து முடிக்குமாறு உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற கட்சியின் விதியில் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. இந்த பதவிகளின் காலம் 5 ஆண்டுகள் என்றும் விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து 2022 ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவை நடத்துவதற்கான அறிவிப்பை 2022 ஜூன் 2ம் தேதி அறிவித்தனர். பொதுக்குழுவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பொதுக்குழுவை நடத்தலாம் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு  ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த பொதுக்குழுவில் தமிழ்மகன் உசேன் கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.

தமிழ்மகன் உசேன் தேர்வு விதிகளுக்கு முரணானது. பொதுக்குழுவுக்கு 15 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு தரவேண்டும். ஆனால், 11ம் தேதி பொதுக்குழுவிற்கு 1ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. கட்சியின் சட்ட விதிகள் மாற்றப்பட்ட நிலையில் பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும்.

தற்காலிக அவைத்தலைவர் எந்த சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தாலும் பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் 1 பகுதியினர் ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரிடம் பொதுக்குழுவை நடத்துமாறு கோரிக்கை வைக்க முடியும். ஆனால், இந்த கூட்டத்தை கூட்டுவதற்கான அதிகாரம் இல்லாத அவைத்தலைவரிடம் 5ல் 1 பகுதியினர் கடிதம் கொடுத்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு கடிதம் கொடுத்து அதில் ஒருவர் மறுப்பு தெரிவித்தால் கூட கூட்டத்தை கூட்ட முடியாது. அப்படி கூட்டினால் அது சட்ட விரோதமாகும். உரிய முன் அறிவிப்பு இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது.

பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால் அதிலிருந்து 30 நாட்களுக்குள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அந்த அடிப்படையில், ஜூலை 11 பொதுக்குழு தகுதியான நபராலோ அல்லது 15 நாட்கள் முன்னறிவிப்பு செய்தோ கூட்டப்படவில்லை. ஜூன் 23க்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறுவதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. அப்படி தெரிவிப்பது கற்பனையானது. கட்சி விதிகளை மீறி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூடி மறைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டால், அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வகை செய்யும் விதிகளில் எவ்விதத்திலும் தற்காலிக அவைத் தலைவர் பொதுக்குழுவை கூட்டுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தடை விதிக்காவிட்டால், எடப்பாடி பழனிசாமி அவரது பதவியில் சவுகரியமாக அமர்ந்துவிடுவார். மனுதாரர் ஓ.பி.எஸ்., வைரமுத்து உள்ளிட்ட கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பொது செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று தெரிவிக்கப்படவில்லை. இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டதாகவே கருத வேண்டும். இரட்டை தலைமைக்கு பதிலாக ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததற்கு எவ்வித புள்ளிவிவரமும், அடிப்படை ஆதாரங்களும் இல்லை.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மேற்கொண்ட இரட்டை தலைமையில் தான் நான்கரை ஆண்டுகளாக கட்சியே நடத்தப்பட்டுள்ளது. முதல்வர், துணை முதல்வர் போன்ற பதவிகள் மூலம் அரசையும் நடத்தி உள்ளனர்.

 இருவரும் சேர்ந்துதான் கூட்டணி, வேட்பாளர் போன்றவற்றில் முடிவெடுத்து இருக்கிறார்கள்.

இந்நிலையில், ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமைதான் வேண்டும் என்ற மனநிலைக்கு மாறியது எப்படி என்ற கேள்வி எழுகிறது. கட்சி தலைமை எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதேசமயம் அந்த நடைமுறையில் மீறல் இருந்தால் நீதிமன்றத்தில் நிவாரணம் கோர எவ்வித தடையும் இல்லை. எனவே, கட்சியின் விதிகளுக்கு முரணாக ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லாது. செல்லாத அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர அனுமதித்தால் கட்சி தொண்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இரு தலைவர்களுக்கு இடையிலான பிரச்னை காரணமாக உள்ளாட்சி இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெற முடியாமல், தாங்க முடியாத இழப்பு கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக உள்ளது என்பதை எடப்பாடி பழனிசாமி தரப்பு நிரூபிக்கவில்லை. எனவே ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரின் ஒப்புதல் இல்லாமல் எந்த பொதுக்குழு, செயற்குழுவும் கூட்டக்கூடாது.

ஒற்றைத் தலைமை குறித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்வது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டுவதற்கு தடையில்லை. 5ல் ஒரு பகுதியினர் முறையாக கடிதம் கொடுத்து பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரினால் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ மறுக்கக் கூடாது. ஒருவேளை இருவருக்கும் இடையில் எந்த காரணத்திற்காகவோ பிரச்னை ஏற்பட்டால் பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம். ஓ.பன்னீர்செல்வம், அம்மன் வைரமுத்து ஆகியோரின் மனுக்கள் முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

* எதிர்கொள்ள தயார்

தீர்ப்பு அறிவிக்கப்பட்டு தங்களுக்கு சாதகமாக இருந்தது தெரியவந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள் திருமாறன், பிரகாஸ், ராஜலட்சுமி, நாகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். எந்த மேல்முறையீடாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். கட்சிதான் எங்களுக்கு முக்கியம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

* எடப்பாடி தரப்பு மேல்முறையீடு

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என்று எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். தீர்ப்பு அறிவிக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள் ஆலோசனை நடந்தது. அதில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பான சட்ட ஆலோசனைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

* தமிழ்மகன் உசேன் நியமனம் செல்லாது

உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்கிறது. கட்சியின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது. தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கம் செய்த கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து அதே பதவியில் நீடிக்கிறார்கள். கட்சி அலுவலகத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செல்ல தடையில்லை. கட்சியின் வங்கி கணக்குகளை கட்சியின் பொருளாளரான ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் மேற்கொள்ளலாம். அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகிகளை நீக்கம் செய்ததும், புதிய நிர்வாகிகளை நியமித்ததும் செல்லாது.

Related Stories: