கீழக்கரை: சீன உளவுக்கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வந்ததையடுத்து கீழக்கரை கடற்கரையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் உளவு கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் இலங்கை வந்தடைந்தது. இதையடுத்து இந்தியாவில் பெரும்பான்மையான கடல் பகுதியை கொண்டுள்ள தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு வெகு அருகில் உள்ளது. எனவே ராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் உள்ளிட்டவை மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.