இரண்டாம் சீசன் நெருங்குகிறது பூங்கா பராமரிக்கும் பணி தீவிரம்

ஊட்டி:  இரண்டாம் சீசன் நெருங்கிய நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பராமரிக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.ஊட்டியில் இரு சீசன்கள் அனுசரிக்கப்படுகிறது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை முதல் சீசனாகவும், செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் மாதம் வரை இரண்டாம் சீசனாகவும் அனுசரிக்கப்படுகிறது. முதல் சீசனில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக உள்ளதால், அப்போது பல்வேறு கண்காட்சிகள் மற்றும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனை கண்டு சுற்றுலா பயணிகளும் மகிழ்கின்றனர். இரண்டாம் சீசனில், முதல் சீசன் போன்று விழாக்கள் அதிகளவு நடத்தப்படுவதில்லை. அதே சமயம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு அரசு தாவரவியல் பூங்காவில் சிறு மலர் அலங்காரங்கள் மேற்க்கொள்ளப்படுகிறது. இம்முறை 10 ஆயிரம் மலர் தொட்டிகளில் நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொட்டிகளில் மலர்கள் பூத்தவுடன் பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். மேலும், பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் சீசன் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பூங்காவை பராமரிக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. தற்போது பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சீரமைக்கும் பணிகள், மலர் செடிகளை பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாள் தோறும் மலர் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பூக்கள் மலர்ந்தவுடன் அனைத்து தொட்டிகளும் அலங்கார மேடைகளில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: