கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே பயன்பாடு இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் மருதன்கோன் விடுதி மற்றும் பந்துவக்கோட்டை ஊராட்சி அமைந்துள்ளது. இந்த 2 ஊராட்சிகளிலும் மொத்தம் 4000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் 1974ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் இருந்த போது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மருதன் கோன் விடுதி ஊராட்சியில் அரசு தொடக்க பள்ளி தொடங்கப்பட்டது. அதன் அருகே பந்துவகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் உள்ளன. முதலில் மருதன் கோன் விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் ஒரே கட்டிடத்தில் இயங்கி வந்த போது பந்துவகோட்டை ஊராட்சியை சேர்ந்த மாணவ, மாணவிகளும் கல்வி பயின்று வந்தனர். அதன் பிறகு அந்த பள்ளி கட்டிடம் அருகே பந்துவகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகள் தொடங்கப்பட்டு இயங்கி வந்தன.