காங்கயம் அருகே 24 ஆண்டுக்கு பிறகு கத்தாங்கன்னி குளம்‌ நிரம்பியது: கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு பாராட்டு

காங்கயம்: காங்கயம் அருகே 24 ஆண்டுக்கு பிறகு முழுமையாக கத்தாங்கன்னி குளம்‌ நிரம்பியது. முன்னெச்சரிக்கையாக குளக்கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுத்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும், ஊராட்சி தலைவர் ஜீவிதா சண்முக சுந்தரத்திற்கும் விவசாயிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே கத்தாங்கன்னி பகுதியில் 300 ஏக்கர் பரப்பில் கத்தாங்கன்னி குளம் அமைந்துள்ளது‌. கொங்கு சோழர்கள் ஆட்சி காலத்தில் இக்குளம் வெட்டப்பட்டது. நொய்யல் ஆற்றில் அணைப்பாளையம் அருகே கற்களால் கட்டப்பட்ட தடுப்பணை மூலம், பருவ மழையால் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ள நீரை, சுமார் 5 கிமீ தூரத்துக்கு வாய்க்கால் வெட்டி குளத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் பாசனத்துக்கு அப்போது தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது இக்குளத்தின் மூலம் 120 ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது‌. பல நூற்றாண்டு பழமை வாய்ந்த கத்தாங்கன்னி குளம் 24 ஆண்டுக்கு முன் மழைநீரால் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இந்நிலையில் அதற்கு பின்னர் நவீனமயம் குளத்தை காணாமல் போக செய்துவிட்டது. திருப்பூர் தொழில் வளர்ச்சி காரணமாக சாய நீர் தொடர்ச்சியாக சுத்திகரிப்பு செய்யாமல் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்கள் மற்றும் பாசன நிலங்கள் கடும் பாதிப்பில் சிக்கியது.

இதைதொடர்ந்து 2009ம் ஆண்டு குளங்களுக்கு நீர் செல்வதை தடுக்க நொய்யல் தடுப்பணைகள் உடைக்கப்பட்டு குளத்துக்கு நீர் வருவது முற்றிலும் தடுக்கப்பட்டது. கடந்த 2010க்கு பின் குளங்களுக்கு தண்ணீர்‌ திறக்கப்படாமல் இருந்த நிலையில், திருப்பூர் சாய ஆலைகள் பூஜ்ஜிய சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சாய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் நொய்யல் ஆற்றில் சாய நீர் கலப்பது வெகுவாக குறைந்தது. இதையடுத்து மழைக்காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் மழை நீரை குளங்களுக்கு திறக்கக்கோரி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். நொய்யலில் வரும் வெள்ள நீரின் டிடிஎஸ்ஐ அளவீடு செய்து மழைநீர் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களுக்கு விடப்பட்டு வந்தது.இந்நிலையில் இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை நீர் சென்று கொண்டிருக்கும் நிலையில், நொய்யல் ஆற்றின் மூலம் நீர் நிரம்பும் வகையில் உள்ள இறுதி குளமான கத்தாங்கன்னி குளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தொடர்ந்து மழைநீர் திறக்கப்பட்டதால் குளத்தின் மொத்த உயரமான 18 அடியை நோக்கி நீர் வேகமாக நிரம்பி வந்தது. தற்போது முழுமையாக நிரம்பியதை அடுத்து, வெள்ளப்போக்கி பகுதி வழியாக 24 ஆண்டுக்கு பின்னர்  உபரி நீர் வெளியேறியது. சோழர் காலத்திய பழமையான கத்தாங்கன்னி குளம் முழுமையாக நிரம்பும் வகையில் குளக்கரையை பலப்படுத்த முன்கூட்டியே திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ளும் வகையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினார். மேலும் படியூர் ஊராட்சி தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் துரிதமாக செயல்பட்டு குளத்தின் நீர்வழிப்பாதை, கரைகளை பலப்படுத்தும் பணிகளை டிராக்டர், ஜேசிபி இயந்திரங்கள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டார். இதன்மூலம் குளம் முழுமையாக நிரம்பி விவசாயிகள் வாழ்வாதாரம் பெரிதும் பாதுகாக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு படியூர் ஊராட்சி தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம், 1வது வார்டு கவுன்சிலர் ‌சந்தானலட்சுமி அருண்தீபக் ஆகியோர் காங்கயம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் உபரியாக வெளியேறிய தண்ணீருக்கு மலர் தூவி  மரியாதை செய்தனர். பல ஆண்டுக்கு பின்னர் கத்தாங்கன்னி குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதை சுற்று வட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சர்யமாக பார்த்து செல்கின்றனர்.

Related Stories: