குடிபோதை தகராறில் விபரீதம்; மாமாவை கம்பியால் அடித்து கொன்ற மைத்துனர் கைது

குன்றத்தூர்: நந்தம்பாக்கம், சாந்தி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (45). இவர், அதே பகுதியில் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி தேவி (35) என்ற மனைவி உள்ளார். கடந்த சில தினங்களாக வெங்கடேசன், மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுவந்தார். ஒரு கட்டத்தில் தேவியை விட்டுப் பிரிந்து, வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு தனியாக சென்றுவிட்டார்.

இந்நிலையில், நேற்று மீண்டும் குடிபோதையில் தேவியின் வீட்டிற்கு வந்தவர், தேவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது, வீட்டில் இருந்த தேவியின் தம்பி சதீஷ்குமார் (30). இதனை தட்டிக்கேட்டுள்ளார். இதில், வெங்கடேசனுக்கும் சதீசுக்கும் இடையை தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் கைகளால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த சதீஷ், அருகில் கிடந்த கம்பியை எடுத்து வந்து, அக்காள் வீட்டுக்காரர் என்றும் பாராமல் வெங்கடேசனை சரமாரியாக தாக்கினார். படுகாயமடைந்த வெங்கடேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த குன்றத்தூர் போலீசார் வெங்கடேசன் உடலை மீட்டு அதனை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே பதுங்கியிருந்த சதீஷை நேற்று போலீசார் கைது செய்தனர். சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் மீது சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் கொலை, அடிதடி, கொலை முயற்சி உள்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Related Stories: