சென்னை: கூட்டு பாலியல் பலாத்கார, கொலை குற்றவாளிகள் விடுதலை என்ற குஜராத் அரசின் நடவடிக்கை முழுமையான அநீதி என்று தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: குஜராத்தில் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தின்போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பல்கிஸ் பானு என்ற பெண்மணி கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேரை படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது மும்பை உயர் நீதிமன்றம். தற்போது ஆயுள் சிறையில் இருந்த 11 பேரையும் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. எஸ்.டி.பி.ஐ கட்சி தேசிய பொதுச்செயலாளர் இலியாஸ் தும்பே: ஏழு பேரை கொடூரமாக கொன்ற வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பதினொரு குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குஜராத் அரசின் இந்த நடவடிக்கை முழுமையான அநீதி.