10 புதிய பால் பொருட்கள் ஆவின் நிறுவனம் அறிவிப்பு: பால்வளத்துறை அமைச்சர் நாசர்

சென்னை: தமிழகத்தில் ஆவின் நிறுவனம் புதிதாக 10 புதிய பொருட்கள் அறிமுகம் செய்யவுள்ளதாக  பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். இந்த புதிய அறிமுகம் வரும் 20ம் தேதி முதல் ஆவின் நிலையங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில்  ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 25 லிட்டர் லட்சம் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் மட்டும் 13 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில்,  ஐந்து லட்சம் பேர் ஆவின் அட்டைதாரர்கள் ஆக இதில் பங்கெடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தினால் பால் மட்டுமின்றி, பல்வேறு பொருட்களான குலாப்ஜாமுன் ,பால்கோவா, ஐஸ்கிரீம் ,நெய் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ,கடந்த சில மாதங்களுக்கு முன்பு நூடுல்ஸ் ,மில்க் கேக், பாயாசம் மிக்ஸ், யோகர்ட் ட்ரிங்ஸ் உள்ளிட்டவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். இதுவரை தமிழகத்தில் 150 பொருட்கள் பல்வேறு ஆவின் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது மேலும் 10 புதிய பால்பொருட்கள் அறிமுகப்படுத்த உள்ளது. அவற்றில் நுகர்வோரால் விரும்பத்தக்க வகையில்  1. பலாப்பழ ஐஸ்கிரீம், 2. வெள்ளை சாக்லேட், 3. குளிர்ந்த காஃபி, 4. வெண்ணெய் கட்டி, 5. பாஸந்தி,  6. ஆவின் ஹெல்த் மிக்ஸ், 7. பாலாடைக்கட்டி, 8. யோகர்ட்  9. ஆவின் பால் பிஸ்கட், 10. ஆவின் வெண்ணெய் முறுக்கு போன்றவற்றை அமைச்சர் நாசர் அறிமுகப்படுத்த உள்ளார்.

மேலும், கடந்த மாதம் ஒன்றிய அரசு தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரியை விதித்து உத்தரவிட்ட நிலையில், மற்ற அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தயிர் பாக்கெட்டுக்கான விலையை 4 முதல் 10 ரூபாய் வரை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: