நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாட்டிற்கும் பிரச்சனை; மனித உடலை தகனம் செய்வதில் கூட பிரச்சனையா?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாட்டிற்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இறந்த மனிதனை தகனம் செய்வதில் கூட பிரச்சனையா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிவகாசி திருத்தங்களை சேர்ந்த பால்பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி கீழ்திருத்தங்கள் கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் நீர்நிலையங்கள் ஆக்கிரமிப்பு உள்ளது. இந்த நீர் நிலையங்களை ஊராட்சி அமைப்புகள் ஆக்கிரமிப்பு செய்து தகன மேடை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதற்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் ஹேமலதா அமர்வு, நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாட்டிற்கும் பிரச்னை ஏற்படுகிறது. இறந்த மனிதனை தகனம் செய்வதில் கூடவா பிரச்சனை ஏற்படும் என்று வேதனை தெரிவித்தார். மேலும், நீர்நிலையம் என மனுதாரர் கூறியுள்ள இடம், நீர்நிலை என இதுவரை வகைப்படுத்தப்படவில்லை. அதற்குள்ளாக மனு தாக்கல் செய்யப்பட்டது ஏற்புடையதல்ல என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: