சென்னை: ஓ.பி.எஸ் தரப்பிடம் 80 சதவீதம் அதிமுகவினர் இல்லை; 80 பேர் மட்டுமே உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சு தொடர்பாக அண்ணா தொழிற்சங்கம் உண்ணாவிரதம் நடத்தி வருகிறது. சென்னை பல்லவன் இல்லத்தில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஊழியர்களுக்கான குழுவில் அண்ணா தொழிற்சங்கம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து உண்ணாவிரதம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பேசிய ஜெயக்குமார், ஓ.பி.எஸ் தரப்பிடம் 80 சதவீதம் அதிமுகவினர் இல்லை; 80 பேர் மட்டுமே உள்ளனர் என்று தெரிவித்தார். சசிகலா, தினகரனை எந்த நிலையிலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஓ.பன்னீர்செல்வம் முடிந்தால் ஆயிரம் பேரை கூட்டி போராட்டம் நடத்தி காட்டட்டும் என்று சூளுரைத்தார். ஆளுநரின் விருந்தில் பங்கேற்க வேண்டும் என கட்டாயம் இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பு பங்கேற்காதது பற்றி ஜெயக்குமார் பதிலளித்தார்.