திருவொற்றியூர்: திருவொற்றியூரில் கடலில் குளிக்கச் சென்று அலையில் சிக்கி மாயமான 4 பேரில் ஒரு பெண் உள்பட 2 பேர் உடல் கரை ஒதுங்கியது. சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கரீம். தையல் கலைஞர். இவரது மனைவி அசின். நேற்று முன்தினம் காலை அசின், தனது மகள் அபிரின் (18). மகன் அபான் (16), உறவினர் கபீர் (24) அபான் நண்பர் சபரி (16) உள்பட 9 பேருடன் திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம் அருகே உள்ள கடற்கரையில் குளிக்க வந்தனர். பெண்கள் அனைவரும் கரையில் அமர்ந்திருக்க ஆண்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அபான், அபிரின், கபீர் மற்றும் சபரி ஆகிய நான்கு பேர் அடுத்தடுத்து ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.