×

பக்தர்கள் 40 மணிநேரம் காத்திருக்க 50 ஆதரவாளர்களுடன் தரிசனம் செய்த அமைச்சர்: திருப்பதியில் கடும் விதிமீறல்

திருமலை: திருப்பதியில் அமைச்சர் 50 ஆதரவாளர்களுடன் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 நாட்களாக ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 40 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் முன்பு  தேங்காய் உடைத்து விட்டு சொந்த ஊர் செல்கின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் வரும் 21ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்தது.
இருப்பினும், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் உஷாஸ்ரீ சரண் நேற்று அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏராளமான ஆதரவாளர்களுடன் சென்றார். அதுமட்டுமின்றி விஐபி தரிசனத்தில் புரோட்டோகால் தரிசனத்தில் 50 டிக்கெட்டுகள் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளார்.  இதற்கு, தலைமை செயல் அதிகாரி தர்மா மறுத்ததால், 15 பேருக்கு மட்டுமே புரோட்டோகால்  தரிசனம் வழங்கப்பட்டது. மீதமுள்ள 35 பேருக்கு  பிரேக் தரிசனம் வழங்கப்பட்டது.

ஏற்கனவே, கடந்த வாரம் கால்நடைத்துறை அமைச்சர் அப்பலராஜூ வந்தபோது, தனது ஆதரவாளர்கள் 150 பேருடன் விஐபி தரிசனத்தில் அழைத்து சென்றார். இதனால், பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து அமைச்சரிடம் நிருபர்கள் கேட்க முயன்றபோது, அவரது பாதுகாவலர்கள் அமைச்சரிடம் செல்லாத வகையில் தடுத்து நிறுத்தினர்.

Tags : Tirupati , Devotees wait 40 hours for darshan with 50 followers: Serious violation in Tirupati
× RELATED தகாத உறவு காதலியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கண்டக்டர் கைது