தை மாத அறுவடைக்கு தயாராகும் விவசாயிகள்; கூலி ஆட்கள் பற்றாக்குறையால் இயந்திரத்தில் நெல் நாற்று நடவு: அதிக லாபம் கிடைக்கும் என தகவல்

நெமிலி: நெமிலி தாலுகாவில் தை மாத அறுவடைக்கு தயாராகும் விவசாயிகள், கூலி ஆட்கள் பற்றாக்குறையால் இயந்திரத்தில் நெல் நாற்று நடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கூலி ஆட்கள் பற்றாக்குறையால், பெரும்பாலான விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் இயந்திரங்கள் மூலம் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் தை மாத அறுவடைக்கு தயாராகி வருவதாகவும், அதிக லாபம் கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

 

ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயம் செய்தால், தை மாதத்தில் அறுவடை செய்யலாம். ஆடி மாதத்தில் விதைத்த நெல்மணிகள் முளைத்துள்ள நிலையில், நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் 100 நாள் வேலை உட்பட பல்வேறு பணிகளுக்கு பலர் சென்றுவிடுவதால், விவசாய பணிகளுக்கு போதிய கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் விவசாயத்தில் இயந்திர பயன்பாடு என்பது மிக அவசியமாகி விட்டது.

அதற்கேற்ப நவீன இயந்திரங்கள் வருகையால் வேலையாட்கள் தேவை குறைவதோடு, வேலையை விரைவாக முடிக்கவும் முடிகிறது. இயந்திரங்கள் மூலம் குறைந்த நேரத்தில் அதிக பரப்பிலான சாகுபடியும் மேற்கொள்ள முடிகிறது. இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கிறது. மேலும் அரசு சார்பிலும் மானியம் வழங்கப்படுகிறது. இதனால் இயந்திரங்கள் மூலம் நடவு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: