புதிய திட்டம் அறிமுகம்; எஸ்பிஐ டெபாசிட் வட்டி உயர்வு

மும்பை: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. மேலும், சிறப்பு டெபாசிட் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு நிறைவடைந்ததை யொட்டி, பாரத ஸ்டேட் வங்கி புதிய டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்தள்ளது. உத்சவ் டெபாசிட் எனப்படும் இந்த திட்டத்தில் 1000 நாட்கள் டெபாசிட்களுக்கு ஆண்டு வட்டியாக 6.1 சதவீதம் எனவும், மூத்த குடிமகன்களுக்கு இத்திட்டத்தில் கூடுதலாக 0.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம் 75 நாட்கள் மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

 

இதுதவிர, பல்வேறு டெபாசிட்களின் மீது வட்டியை 15 அடிப்படை புள்ளி உயர்த்தியுள்ளது. இதன்படி 180 முதல் 210  நாட்களுக்கு  4.40%ல் இருந்து 4.55 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதுபோல் ஓராண்டுக்கு மேல் 2 ஆண்டுக்கு உட்பட்ட டெபாசிட்களுக்கு  வட்டி  5.45%, 2 ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு 5.5 சதவீதம், 3 ஆண்டுக்கு மேல்  5 ஆண்டுக்குள்  5.60 சதவீதம், 5 ஆண்டுக்கு மேல் 10 ஆண்டு வரையிலான டெபாசிட்களுக்கு 5.65 சதவீதம் என வட்டி விகிதம் நிர்ணயித்துள்ளது.

மூத்த குடிமகன்களுக்கு எஸ்பிஐ வி கேர் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் கூடுதல் 0.5 சதவீதத்துக்கு மேல் 0.3 சதவீதம் வழங்கப்படும். இது 5 ஆண்டு அல்லது அதற்கு மேலான டெர்ம் டெபாசிட்களுக்கு மட்டுமே பொருந்தும்.  வி கேர் சிறப்பு டெபாசிட் திட்டம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

Related Stories: