காலநிலை மாற்றத்தால் நிகழும் பாதிப்பை எதிர்கொள்ள தமிழகத்தில் முதன்முறையாக 25 பசுமைப் பள்ளிகள் திட்டம்: சுற்றுச்சூழல் துறை அதிரடி அறிவிப்பு

சென்னை: காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகத்தில் முதன்முறையாக 25 பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்றும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால், பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக பெரிய அளவில் அழிவுகளும் ஏற்பட்டுள்ளன. கால மாற்றத்தால், காலநிலை மாறி மழை பொழிவு, மழை பொழிவு இல்லாமல் இருப்பது என்பதும் நிகழ்கிறது. இதனால் உலகம் முழுவதும் சுற்றுச்சூழலை மேம்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில், சுற்றுச்சூழல் துறை பல்வேறுவித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, தீபாவளி நேரத்தில் பசுமை பட்டாசுகளை வெடிப்பது, பண்டிகை காலங்களில் பழைய பொருட்களை எரிப்பதை தடுப்பது, வாகன புகையில் இருந்து காப்பது, சுற்றுச்சூழலை காக்க நகரங்களிலேயே அதிக அளவில் மரங்களை நடுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருகட்டமாக, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் பசுமைப் பள்ளி திட்டத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:

காலநிலை மாற்றம் என்பது தற்போது நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உண்மை. இந்த சூழ்நிலையில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளவும், அதன் பாதிப்புகளை தணிப்பதற்கும் சிறார்களை தயார் செய்ய வேண்டியுள்ளது. பசுமைப் புரட்சியானது, இளைய தலைமுறையினரிடம் இருந்து தொடங்கப்பட வேண்டும். எனவே முதல்வரின் பசுமை இயக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 25 பசுமை பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆற்றல் திறனை மேம்படுத்த சூரிய ஆற்றலின் உதவியுடன் சூரிய சக்தி மேட்டார் பம்புகள் பயன்படுத்துதல், மழைநீர் சேகரிப்பை நடைமுறைப்படுத்துதல், மக்கும் உரம் தயாரித்தல், காய்கறி மற்றும் மூலிகை தோட்டங்கள் உருவாக்குதல், பழங்கள் தரும் மரங்களை நடுதல், நீர் பயன்பாட்டை குறைத்தல், கழிவுநீரை மறுசுழற்சி செய்தல், நெகிழி இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குதல் மற்றும் ஏனைய பசுமைப் பணிகளும் இந்த பள்ளிகளில் மேற்கொள்ளப்படும். பள்ளியின் அனைத்து மின்தேவைகளும், சூரிய ஆற்றல் உற்பத்தி மூலம் பெறப்படும்.

இந்த பள்ளிகளானது பசுமைப் பள்ளிக்கான முன்னோடி பள்ளிகளாக விளங்கி மற்ற பள்ளிகளும் பசுமைப் பணிகளை மேற்கொள்ள ஊக்கமாக அமையும். மேலும், இந்த பள்ளிகள் பசுமை திட்டங்கள் தொடர்பான தகவல் திரட்டை உருவாக்குவதற்காக பசுமை அட்டவணையில் மதிப்பீடு செய்யப்படும்.

மேற்கூறிய திட்டத்திற்காக தமிழக அரசால் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் 25 பள்ளிகளுக்கு செலவிடப்படும். இது ஆரம்பம்தான். இதை தொடர்ந்து தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளை பசுமைப்பள்ளிகளாக மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: