பிரின்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நிறைவு; மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை.! அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்

சென்னை: சென்னை மடிப்பாக்கம்  பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  மற்றும் பிரின்ஸ் ஸ்ரீவாரி மேல்நிலைப் பள்ளிகளின் சார்பில் நடைபெற்ற அறிவியல், கலை மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி நிறைவு விழா மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர்  முனைவர்  கே.வாசுதேவன் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் வா.விஷ்ணு கார்த்திக், பிரசன்னா வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் கே.பி.லத்தா வரவேற்றார். இதில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்கள் மற்றும் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்தினார்.

இதன்பின்னர் அமைச்சர் பேசியதாவது; கல்வி என்பது தொலைநோக்கு பார்வை கொண்டது. வாழ்க்கைக்கு தேவையான அறத்தை கற்றுக் கொடுப்பது. மாணவர்களின் பெரும் மதிப்பெண்ணைகளை காட்டிலும் அவர்கள் சமுதாயத்திற்கு நல்ல மனிதர்களாக  திகழ தேவையானவற்றை பள்ளிகள் கற்றுத் தர வேண்டும். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாணவர்கள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி அதற்கு முறையாக காப்புரிமை பெற வேண்டும். தமிழக அரசு கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டுவரும் நல்ல திட்டங்களினால் அரசு பள்ளிகளை வறுமையுடன் பார்க்கும் நிலை போய் இன்று பெருமையுடன் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.

மாணவர்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறது. எனவே மாணவர்கள் அரசின் திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு பேசினார். விழாவில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எஸ்.அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ, சென்னை மாநில கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.ராமன், பேராசிரியர் எஸ்.ரகு, கவுன்சிலர் ஜே.கே.மணிகண்டன், பிரின்ஸ் பள்ளிகளின் கல்வி ஆலோசகர்கள் கே.பார்த்தசாரதி, எம்.தருமன், எ.ன்.சிவப்பிரகாசம், பி.ஆர்.ரவிராம், முனைவர் ஷர்மிளா, நிவேதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: