சென்னை: சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம் (டபிள்யூடிஏ) உடன் தமிழ்நாடு அரசு இணைந்து மகளிருக்கான ‘சென்னை ஓபன்’ டென்னிஸ் போட்டியை நடத்த உள்ளது. அதன்படி செப்.12ம் தேதி தொடங்கும் சென்னை ஓபன் செப்.18ம் தேதி வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட்ட உள்ளது. இந்தப் போட்டிகளை சோனி ஸ்போர்ட்ஸ் நேரடியாக ஒளிபரப்பு செய்யும்.
சென்னை ஓபன் குறித்து தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவரும் முன்னாள் வீரருமான விஜய் அமிர்தராஜ் கூறுகையில், ‘செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ் நாடு அரசுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள மகளிர் டென்னிஸ் போட்டித் தொடரை வெற்றிகரமாக நடத்த ஆயத்தமாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மகளிர் டென்னிஸ் பிரபலமாகவும், வளர்ச்சி அடையவும் இந்த போட்டி உதவும்’ என்றார்.