கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவில் அபு செவெயின் பகுதியில் காப்டிக் தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 41 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த 15 தீயணைப்பு வண்டிகள், நீண்ட நேரப் போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்தன.
காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். ஆனால், சுகாதார அமைச்சகம் காயமடைந்த 55 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறியுள்ளது. தேவாலயத்தின் 2வது மாடியில் மின் கசிவினால் குளிர்சாதனப் பெட்டி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக எகிப்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காப்டிக் தேவாலயத்தின் போப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.