சென்னை: டபிள்யூடிஏ மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டியான ‘சென்னை ஓபன்’செப்.12ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி அசத்திய தமிழ் நாடு அரசு, அடுத்த சர்வதேச போட்டிக்கு தயாராகி வருகிறது. அது அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச டென்னிஸ் போட்டி. சென்னையில் ஏற்கனவே ஆண்களுக்கான ஏடிபி டென்னிஸ் தொடர் 2018ல் மகாராஷ்டிரா ஓபனாக புனேவுக்கு மாற்றப்பட்ட நிலையில், இப்போது முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம் (டபிள்யூடிஏ) உடன் தமிழ்நாடு அரசு இணைந்து மகளிருக்கான‘சென்னை ஓபன்’டென்னிஸ் போட்டியை நடத்த உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையில் சென்னை ஓபன் நடைபெறும் தேதியும் முடிவாகி உள்ளது. அதன்படி செப்.12ம் தேதி தொடங்கும் சென்னை ஓபன் செப்.18ம் தேதி வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட்ட உள்ளது. இந்தப் போட்டிகளை சோனி ஸ்போர்ட்ஸ் நேரடியாக ஒளிபரப்பு செய்யும். சென்னை ஓபன் குறித்து தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவரும் முன்னாள் வீரருமான விஜய் அமிர்தராஜ் கூறுகையில், ‘செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ் நாடு அரசுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள மகளிர் டென்னிஸ் போட்டித் தொடரை வெற்றிகரமாக நடத்த ஆயத்தமாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மகளிர் டென்னிஸ் பிரபலமாகவும், வளர்ச்சி அடையவும் இந்த போட்டி உதவும்’ என்றார்.