பங்குச் சந்தையின் ‘பிக் புல்’ மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

மும்பை: இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், பங்குச் சந்தையின் ‘பிக் புல்’ என்று அழைக்கப்பட்டவருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (62), கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். சிறுநீரக கோளாறுகள் உட்பட பல உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த அவர்,  சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டார். ஆனால் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் கேண்டி ப்ரீச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஹங்காமா மீடியா மற்றும் ஆப்டெக் ஆகியவற்றின் தலைவராகவும், வைஸ்ராய் ஹோட்டல்ஸ், கான்கார்ட் பயோடெக், ப்ரோவோக் இந்தியா, ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆகியவற்றின் இயக்குநராகவும் இருந்தார். இவர் தனது கல்லூரி நாட்களில் இருந்தே பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினார். இவரை இந்திய பங்குச் சந்தையின் வாரன் பஃபெட் என்றும் பங்கு வர்த்தகர்கள் அழைத்து வந்தனர். கேபிடல்மைண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான தீபக் ஷெனாய் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘வர்த்தக முதலீட்டாளராகவும், பலருக்கு உத்வேகம் அளிக்கும் சிறந்த மனிதராக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இருந்தார். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்’ என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories: