எழும்பூரில் காந்தியடிகளின் திருவுருவச் சிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.!

சென்னை: சென்னை, எழும்பூர், அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் சார்பில் சென்னை, எழும்பூர், அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலையினை நாளை காலை 10.30 மணியளவில் திறந்து வைக்க உள்ளார். உத்தமர் காந்தியடிகள் தமிழ்நாட்டில் மேலாடை துறந்து எளியவர்களைப் போல அரை ஆடை உடுத்திய நூற்றாண்டு நினைவாகவும், 75வது சுதந்திரத் திருநாள்அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கின்ற வகையிலும் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலையானது தமிழக முதல்வரால் நாளை திறக்கப்படவுள்ளது.

நம் நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட உத்தமர் காந்தியடிகள் 30.1.1948 அன்று அகால மரணத்தைத் தழுவினார். 1949ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 12ம் நாள் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அண்ணல் காந்தியடிகளின் அஸ்தி கரைக்கப்பட்டு அதன் நினைவாக அமைக்கப்பட்ட காந்தி மண்டபம் 30.5.1956 அன்று திறந்து வைக்கப்பட்டது. அண்ணலுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னையில் காந்தி மண்டப வளாகம் 27.1.1956 அன்றும், இவ்வளாகத்தில் அண்ணல் காந்தியடிகளின் அருங்காட்சியகமும் 2.10.1979 அன்றும் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

Related Stories: