சென்னை: அரசு விரைவு பேருந்துகளில் இருக்கையை முன்பதிவு செய்ய பயன்படுத்தப்படும் டிஎன்எஸ்டிசி ‘செயலி’யில், பார்சல்களை முன்பதிவு செய்வதற்கான வசதியும் விரைவில் கொண்டுவரப்படுகிறது என போக்குவரத்துத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அந்தஅதிகாரி ஒருவர் கூறியதாவது: நாள் ஒன்றுக்கு சராசரியாக 25 முதல் 35 பார்சல்கள் பஸ்கள் மூலம் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் ரூ.9 முதல் ரூ.11 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி, ஓசூர், சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து அதிக அளவு பார்சல் அனுப்பப்படுகிறது. முதலில் பார்சல்களை அனுப்புவதற்கு பணிமனைகளில் முன்பதிவு செய்யும் வசதி தான் இருந்தது. இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளின் இருக்கையை முன்பதிவு செய்ய பயன்படும் டிஎன்எஸ்டிசி செயலியிலேயே பார்சல்களை அனுப்பும் வசதி செய்யப்படுகிறது.