20 நொடிகளில் 15 முறை குத்திக்குத்து சல்மான் ருஷ்டிக்கு செயற்கை சுவாசம்: கண்பார்வை, பேச்சு பறிபோகும் அபாயம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்டதால் படுகாயமடைந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு வென்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்படுகிறது. கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டால் நரம்பு துண்டாகி, ஒரு கண்ணில் பார்வையையும், பேச்சு திறனையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கலந்து கொண்டார். மேடையில் பேசுவதற்காக அவர் சென்றபோது, பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த ஒரு வாலிபர், திடீரென மேடையின் மீது ஏறி சல்மானை கழுத்திலும், வயிற்றிலும் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில், பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, வென்டிலேட்டர் உதவியுடன் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சல்மான் உடல்நிலை தொடர்பாக அவரது உதவியாளர் கூறுகையில், ‘இது நல்ல செய்தி கிடையாது. கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டால் நரம்பு துண்டிக்கப்பட்டதால், சல்மான் தனது கண்களில் ஒன்றில் பார்வையை இழக்க நேரிடலாம். அவர் பேசும் திறனையும் இழக்கக்க கூடும். அவருடைய கல்லீரலும் கத்திக்குத்தில் சேதமடைந்து உள்ளது,’ என்று தெரிவித்தார். சல்மானை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவனுடைய பெயர் ஹதி மதார் (24), அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியை சேர்ந்தவன். சல்மானை அவன் கத்தியால் குத்தியதற்கான காரணம் குறித்து தொடர்ந்து அவனிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சல்மானை தாக்கிய வாலிபர், இருபதே நொடிகளில் 15 முறை அவரை கத்தியால் குத்தி இருக்்கிறான். மிகவும் வெறிபிடித்த இந்த தாக்குதல், சல்மானுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை திகைக்க வைத்துள்ளது. இந்த தாக்குதலுக்காக அவர் சிறப்பு பயிற்சிகளை எடுத்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தி இருக்கிறது. சல்மானை இவர் தாக்கியபோது தடுத்த ஒருவருக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது.

* சல்மான் ருஷ்டி கடந்த 1981ல் எழுதிய ‘மிட்நைட் சில்ட்ரன்’ என்ற புத்தகத்துக்காக புக்கர் விருது பெற்றவர்.

* இவர் கடந்த 1988ம் ஆண்டு எழுதிய, ‘சாத்தானின் கவிதைகள்’ என்ற புத்தகம், இஸ்லாம் மதத்தை அவமதிப்பதாக கூறி, ஈரான் மதத் தலைவரான கொமேனி அவருக்கு மரண தண்டனை விதித்தார்.

* அவரை கொல்பவருக்கு பல கோடி பரிசும் அறிவிக்கப்பட்டது. அல்-கொய்தா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் அவரை கொல்வதற்கு பலமுறை முயன்றுள்ளன.

* இதன் காரணமாக சல்மான் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால், தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அவருக்கு இங்கிலாந்து அரசு பாதுகாப்பு அளித்தது. சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர் அமெரிக்காவில் குடியேறினார்.

* 1998ம் ஆண்டு சல்மானுக்கு கொமேனியால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஈரான் அரசு நிறுத்த உத்தரவிட்டதால், வெளி உலகில் சல்மான் நடமாட தொடங்கினார்.

Related Stories: