சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: போதைப் பொருள் தடுப்புக்காக அனைத்து மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டி அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார். தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கையை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது. கடுமையான போதையும், மோசமான பின் விளைவுகளையும் தரக் கூடிய கஞ்சா துகள்கள், இன்றைய இளைஞர்களிடம் மிகச் சாதாரணமாக புழங்க ஆரம்பித்து விட்டது. இந்த சூழலில் எந்த முதல்வர்களும் இதுவரையில் செய்யாத வகையில், போதைப் பொருட்கள் விற்பனை, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிரான தமிழக முதல்வரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.