போலீஸ் வேன், கத்தி, துப்பாக்கியுடன் தாதா போல் சித்தரித்து வீடியோ; மாணவன் உள்பட 2 பேர் கைது

தண்டையார்பேட்டை: இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தினம் தினம் புதுப்புது வீடியோக்களை வெளியிட்டு லைக்ஸ் வாங்குவதில் இன்றைய தலைமுறை இளைஞர்கள் அதிகளவில் ஆர்வம்காட்டி வருகின்றனர். அதீத ஆர்வம் காரணமாக பைக் ரேஸ், நீர்வீழ்ச்சியில் செல்பி போன்ற சாகசங்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், சென்னையில் வாலிபர்கள் சிலர், போலீஸ் வாகனத்தை பயன்படுத்தி, கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாதா போல் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டதால், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாலிபர் ஒருவர், போலீஸ் வாகனத்தில் இருந்து அடியாட்களுடன் இறங்கி வருவது, கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரத்தம் தெறிக்க... தெறிக்க... பலரை கொடூரமாக வெட்டி கொல்வது, பின்னர் தாதாவாக மாறுவது போன்ற வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் மூலம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. போலீசார் விசாரணையில், புதுவண்ணாரப்பேட்டை துறைமுக பொறுப்பு கழக குடியிருப்பு பகுதியில் தங்கியுள்ள மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக பயன்படுத்தும் வாகனத்தில் தான் இந்த வீடியோ  எடுக்கப்பட்டது தெரியவந்தது.

புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் நவீன் குமார் என்பவர் தினமும் இந்த காவல் வாகனத்தில் மத்திய பாதுகாப்பு படை போலீசாரை அழைத்து  சென்று, உயர் நீதிமன்றத்தில் இறக்கிவிட்டு, மீண்டும் துறைமுக பொறுப்பு கழகம்  குடியிருப்பு வளாகத்தில் அந்த காவல் வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு  செல்வது வழக்கம். அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்  வாகனத்தை பயன்படுத்தி வாலிபர் ஒருவர், 3 இளைஞர்களுடன் சேர்ந்து, தன்னை தாதா போல் சித்தரித்து வீடியோ எடுத்தது தெரிந்தது. விசாரணையில் புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர் 2வது  தெருவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் வினோத் (22), இவரது நண்பரான மணலி  புதுநகர் 132வது பிளாக் பகுதியை சேர்ந்த சஞ்சய் (22) ஆகிய இருவர் இந்த வீடியோவை எடுத்தது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர். தலைமறைவான போட்டோகிராபரை தேடி வருகின்றனர்.

Related Stories: