ஊத்துக்கோட்டை: ஆரணி ஆற்றில் கழிவுநீர் விடுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வியாபாரிகள், விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களின் குடிநீர் தேவைக்காக, ஊத்துக்கோட்டை ஆரணியாற்றிலிருந்து ஆழ்துளை கிணறு மூலம், பஸ் நிலையத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது. அதை அங்கு தேக்கி வைத்து பின்னர் காலை நேரங்களில் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஊத்துக்கோட்டையில் உள்ள திருவள்ளூர் சாலையின் இருபுறமும் மழைநீர் செல்வதற்காகவும், இந்த மழைநீர் ஆற்றில் கலப்பதற்காக 1980ம் ஆண்டு மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. பின்னர், ஆரணியாற்றின் குறுக்கே ரூ.28 கோடியில் புதிய மேம்பாலமும் அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலம் கட்டுவதற்காக 500 மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும், புதிதாக மழைநீர் கால்வாயும் கட்டப்பட்டது.