சென்னை: சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றுவதில் சாதிய பாகுபாடு நடைபெறாமல் தடுக்க மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: ஒரு சில கிராம ஊராட்சிகளில் சாதிய பாகுபாடுகள் காரணமாக தேசியக்கொடியை ஏற்றுவதில் பிரச்னைகளோ, தேசியக்கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலோ நடைபெறலாம் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரை சேர்ந்த நகராட்சி, ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர், அலுவலக பணியில் உள்ளவர்கள் என எவரையும் அவர்களது அலுவலக பணிகளையும் மற்றும் கடமைகளையும் செய்யவிடாமல் தடுப்பதோ அல்லது அச்சுறுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.