மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு தமிழகத்தில் வருங்காலத்தில் முன்னேறிய, பின்தங்கிய மாவட்டம் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது

சென்னை: வருங்காலத்தில் தமிழ்நாட்டில் முன்னேறிய மாவட்டம் - பின்தங்கிய மாவட்டம்  என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என்று மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  கேட்டுக்கொண்டார். தமிழக முதல்வரும், தமிழ்நாடு மாநில திட்டக்குழு தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, சேப்பாக்கம் எழிலகத்தில் மாநில திட்டக்குழுவின் மூன்றாவது குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில திட்டக்குழு துணை தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம், குழு உறுப்பினர்கள் பேராசிரியர் இராம.சீனுவாசன், பேராசிரியர் ம.விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு.தீனபந்து, டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ, மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த ஆட்சி செல்ல வேண்டிய பாதையையும், செல்லும் பாதை சரியானது தானா என்பதையும் அறிவுறுத்தும் அமைப்பாக திட்டக்குழு செயல்பட்டு வருகிறது. தொடக்கம் முதல் எத்தகைய ஆர்வத்துடன் ஆலோசனைகளை சொல்லி வருகிறீர்களோ, அதைப்போலவே வருங்காலத்திலும் உங்களது பங்களிப்பு இதேபோல் தொடர்ந்து  இருக்க வேண்டும். இவைத்தவிர மாநிலத்திற்கு தேவையான எதிர்கால நோக்குடன் கூடிய மருத்துவம், சமூகநலன், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் போன்ற முக்கிய துறை சார்ந்த சில கொள்கைகளையும் விரைந்து வகுத்து இறுதி செய்திட வேண்டும். பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நீங்கள் செய்துள்ள சீராய்வுகள் அவற்றை மென்மேலும் சிறப்புற செயல்படுத்த ஒரு முக்கிய திறவுகோலாக அமையும்.

குறிப்பாக, மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் இன்று மக்களின் இதயத்தில் நீங்காத இடம்பெற்றுள்ளது. இதில் பயனடைந்தவர்களில் 80 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் வகுப்பினை சேர்ந்தவர்கள்  என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி மட்டுமல்ல, திராவிட மாடல் ஆட்சிக்கு இது நல்ல அடையாளமும் கூட. இந்த திட்டத்தால் அந்த குடும்பங்களின் வருவாயில் 8 முதல் 12 சதவீதம் சேமிப்பு கிடைக்கிறது என்பது ஒரு பொருளாதார புரட்சி என்றே நான் சொல்வேன். ஆகவே இந்த மகளிருக்கான திட்டத்தை ‘இலவசம்’ என்று ஒரு குறுகிய அடைப்புக்குள் அடக்கிடாமல், கிராமப்புற ஏழை எளிய மக்களிடையே நடைபெற்றுள்ள பொருளாதார புரட்சி என்றே இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆகவே, இத்திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்கள் இன்னமும் பயனடைய வேண்டும்.

இதன் மூலமாக அவர்களது வாழ்க்கை தரம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதையும் அடையாளம் காணுங்கள். வேளாண் பகுதி, சுற்றுலா மற்றும் வர்த்தக பகுதி, தொழில்பகுதி என்று பிரித்து ஆய்வு செய்வதாக கூறியிருக்கிறீர்கள். அது நான் ஏற்கனவே கூறிய மாதிரி நல்ல முயற்சி. அதை விரைந்து முடித்து, இந்தத் திட்டத்திற்கும், மக்களுக்கும் உள்ள நல்லுறவை தெரிவிக்க வேண்டும். இத்திட்டம் மட்டுமல்ல, பொது விநியோக திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களுக்கும், மக்களுக்கும் இடைவெளி ஏற்பாடாமல் இருக்க என்ன வழி என்பதை கண்டறியுங்கள். அறிவிக்கப்படும் திட்டத்தின் பிளஸ், மைனஸ் ஆகிய இரண்டையும் அலசி ஆராய்ந்து, நீங்கள்தான் அரசுக்கு சொல்ல வேண்டும். திட்டமிடும் குழுவாக மட்டுமல்ல, கண்காணிக்கும் குழுவாகவும் நீங்கள் இருக்க வேண்டும்.

திராவிட மாடல் கொள்கையின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று அனைத்து மாவட்ட வளர்ச்சி. இதுகுறித்து, நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான தனித்தன்மை இருக்கும். அதனை வரையறுத்து அரசுக்கு அதிலிருந்து சில திட்டமிடுதல்களையும் பரிந்துரைகளையும் செய்ய வேண்டும். வருங்காலத்தில் தமிழ்நாட்டில் முன்னேறிய மாவட்டம் - பின்தங்கிய மாவட்டம் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன்.

இதுவரை மாநில திட்டக்குழு எடுத்துள்ள முயற்சிகள் அரசின் செயல்பாட்டிற்கு தூண் போல் நின்று உதவுகிறது. அந்த பணியை தொடர்ந்து ஆற்றி, எனது தலைமையிலான இந்த திட்டக்குழு, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பொன்னேட்டில் பதிக்கப்படும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான கொள்கைகளை வகுத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் மேலும் பேசுகையில், சில முக்கியமான கொள்கைகளை வகுக்கும் பணி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. * மின் வாகன கொள்கை * தொழில் 4.0 கொள்கை, * குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொள்கை, * துணிநூல் கொள்கை, * கைத்தறி கொள்கை, * சுற்றுலா கொள்கை என்றார்.

Related Stories: