ஆங்கிலேய ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நாட்டின் 75-வது சுதந்திரத்தினத்திலும் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வழக்கு ஒன்றில்  காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் 19 ஆர்டர்லிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்கானிப்பாளர் மாநாட்டிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 19 ஆர்டர்லிகள் திரும்பப் பெற பட்டுள்ளனரா என கேள்வி எழுப்பிய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முதல்வரின் வெறும் எச்சரிக்கை மட்டும் போதாது என்றும் நடவடிக்கை அவசியம் எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் அனைத்து குடிமக்களும் ராஜா, ராணிகள் தான் எனவும் நாம் அனைவரும் அவர்களின் சேவகர்கள் தான் எனவும் கூறினார். 75-வது சுதந்திரத்தினம்  கொண்டாடும் நிலையில் ஆங்கிலேய ஆர்டர்லிகளை  முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது என நீதிபதி வேதனை தெரிவித்தார். ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும் என குறிப்பிட்ட நீதிபதி ஆனால் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ வருவதில்லை என கூறினார். தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலத்தில் ஆர்டர்லி முறை இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதி ஆர்டர்லி பயன்ப்[அடுத்து காவல் உயரதிகாரிகளை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் டிஜிபியை எதிர் மனுதாரராக சேர்த்த நீதிபதி ஆர்டர்லி முறை ஒழிப்பு தொடர்பாக தமிழக உள்துறை முதன்மை செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரனையை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Related Stories: