75-வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னையின் பல இடங்களில் மின் விளக்கு அலங்காரங்கள்: ஜொலிக்கும் சிங்கரா சென்னை

சென்னை: 75-வது சுதந்திர தின விழா வருகிற 15- ந்தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையின் பல இடங்களில் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. சென்னையின் பழமை வாய்ந்த முக்கிய கட்டிடங்கள் அனைத்திலும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ண வண்ண மின்விளக்குகள் மற்றும் பலூன் அலங்காரங்கள் செய்யப்பட்டு பிரமாண்டமாக காட்சி அளித்து வருகின்றது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலைய பாரம்பரிய கட்டிடங்களில் மூவர்ண தேசியக்கொடி அலங்காரத்தில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு ஜொலித்து வருகிறது. தலைமைச்செயலகம் அமைந்து உள்ள சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி பாரம்பரிய ரிப்பன் மாளிகை கட்டிடம், பாரிமுனையில் உள்ள பழங்கால கட்டிடங்கள், தனியார் நிறுவன கட்டிடங்கள், ஓட்டல்கள் அனைத்திலும் வண்ண மின்விளக்கு அலங்கார வசதிகள் செய்யப்பட்டு இரவில் ஜொலித்து வருகிறது.

சாலையோர மரங்களிலும் அலங்கார சீரியல் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இரவில் ஜொலித்து வருகிறது. மெட்ரோ ரெயில் நிலைய உள்பகுதியில் இந்தியாவின் விடுதலைக்கு பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளன. ஐ லவ் இந்தியா என்ற வாசகத்துடன் செல்பி எடுத்துக்கொள்ளும் வகையிலும் அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதில் சிறுவர், சிறுமிகள், பயணிகள் அனைவரும் ஆர்வமுடன் செல்பி போட்டோக்கள் எடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Related Stories: