மகளிர் இலவசப் பேருந்து திட்டம் என்பது இலவசமல்ல; ஒரு பொருளாதார புரட்சி: மாநிலத் திட்ட குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!!

சென்னை: தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தால் அக்குடும்பங்களுக்கு 8 - 12 சதவீதம் சேமிப்பு கிடைக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலத் திட்ட குழுவில் 3வது கூட்டத்தில் அதன் தலைவராக முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டம் இன்று மக்களின் இதயத்தில் நீங்காத இடம்பெற்றுள்ளது. இலவச பேருந்து திட்டத்தால் பயனடைந்தவர்களில் 80 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் வகுப்பினர் என்பது மகிழ்ச்சிக்குரியது. மகளிர் இலவசப் பேருந்து திட்டம் என்பது இலவசமல்ல; ஒரு பொருளாதார புரட்சி என்று முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

அதாவது, கிராமப்புற, ஏழை, எளிய மக்களிடையே நடைபெற்றுள்ள பொருளாதார புரட்சியே மகளிர் இலவசப் பேருந்து திட்டம். திராவிட மாடல் ஆட்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு மகளிர் இலவசப் பேருந்து திட்டம் என்று குறிப்பிட்டார். பொதுவிநியோகம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக்கல்வி திட்டங்களும் கிராமந்தோறும் சென்றடைய வேண்டும். வருங்காலத்தில் தமிழ்நாட்டில் முன்னேறிய மாவட்டம், பின்தங்கிய மாவட்டம் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது. திராவிட மாடல் கொள்கையின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories: