முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு சுய தொழில் தொடங்க கடனுதவி; கலெக்டர் ஆர்த்தி தகவல்

காஞ்சிபுரம்: புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில், கூடுதல் மானியத்துடன் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு சுய தொழில் தொடங்க கடனுதவி பெற்று  பயனடையலாம் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில்   படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக மாற்ற உதவும் நோக்கத்தின் அடிப்படையில் “புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதிய திட்டமானது ஏற்டுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்கி கடன் பெற 12ம் வகுப்பு தேர்ச்சி கல்வித் தகுதி என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இத்திட்டத்தின், கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ. 75 லட்சம் மானியமும் மாற்றுதிறனாளிகள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீத மானியமும், வங்கிகள் கொடுக்கும் கடனுக்காக வட்டியில் 3 சதவீதம் மானிய உதவியும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், தொழில் முனைவோரின் தொழில் திட்ட தொகை குறைந்தபட்சம் ரூ. 10 லட்சத்திற்க்கு மேல் இருக்க வேண்டும். அதிகபட்ச கடன் தொகை ரூ. 5 கோடி வரை வழங்கப்பட உள்ளது. கடன் பெற விரும்புவோர் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டயப் படிப்பு, தொழில் நுட்ப பயிற்சி (ஐடிஐ), தொழில் பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.

பொது பிரிவினருக்கு வயது 35க்குள் இருக்க வேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், திருநங்கையர், மாற்று திறனாளர்கள், முன்னாள் இராணுவத்தினர் வயது 45 க்குள் இருக்கவேண்டும். மருத்துவமணைகள், பிசியோதரபி மையங்கள், மருத்துவ ஆய்வங்கள், கட்டுமான உதவி பொருட்கள் வாடகைக்கு விடுதல் மற்றும் நிலம் அகழ்வி (எர்த் மூவர்ஸ்) வாடகைக்கு விடுதல் ஆகிய சேவை சார்ந்த தொழில்களுக்கு மானியத்துடன் கடன் உதவி அளிக்கப்படுவது இத்திட்டத்தின் சிறப்பம்சம்.

இத்திட்டத்தில் கடனுதவி பெறும் நபர்களுக்கு இணையதளம் வழியே தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தில், 50 சதவீதம் பெண் தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதிகள் உடைய தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை பெற காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரில் அணுகி அல்லது 044-27238837, 27236686, 27238551, 9566990779 என்ற தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: