ஸ்ரீ ராகவேந்திரா கோயிலில் சத்யநாராயண பூஜை

மதுராந்தகம்:  மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் ஸ்ரீ ராகவேந்திரா சாமிகள் பிருந்தாவனத்தில் 99வது பௌர்ணமி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆலய வளாகம் முழுவதும் மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் அனைவருக்கும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ரகோத்தம சுவாமி சித்தர் அருளாசி  வழங்கினார். காலை 11 மணி முதல் 12 மணி வரை சேஷபீடத்தில்  அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள் தங்கள் கரங்களால் ஓம் நமசிவாய மந்திர உச்சாடனைவுடன் அபிஷேகம் செய்தனர்.

அதனை தொடர்ந்து மக்கள் சுபிட்சமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்தியநாரயண பூஜையும் செய்து மகாதீப ஆராதனையை சித்தர் பக்தர்களுக்கு காண்பித்தார். கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் தீபாராதனையை வணங்கினர்.

விழாவில், கருங்குழி மட்டுமின்றி செங்கல்பட்டு, சென்னை, கடலூர் மற்றும் விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் கலந்துக்கொண்டு சித்தரிடம் ஆசிபெற்று சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை யோகி ரகோத்தமா சாமிகள் அறக்கட்டளை அறங்காவலர் ஏழுமலைதாசன் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: