சாலையை கடப்பதில் மாணவர்களுக்கு சிரமமாக இருப்பதால் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம்; முன்பு போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்: பெற்றோர் கோரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவியர் சாலையை கடப்பதற்கு சிரமாக இருப்பதால், பழைய மற்றும் புதிய  பேருந்து நிலையம் முன்பு போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாவட்டத்தின் தலைநகரான செங்கல்பட்டில்   பழைய பேருந்து நிலையம் மற்றும்  புதிய பேருந்து அருகில் 20க்கும் மேற்பட்ட  அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு தினமும் செங்கல்பட்டு, அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஆத்தூர், திம்மாவரம், வில்லியம்பாக்கம், சிங்கப்பெருமாள் கோயில், மெய்யூர், புக்கத்துறை, ஆலப்பாக்கம், அஞ்சூர், தென்மேல்பாக்கம், மேலைமையூர், வல்லம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், தினமும் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் வந்து கல்வி பயின்று செல்கின்றனர்.

பள்ளி துவங்கும் நேரமான காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில்  போக்குவரத்து நெரிசலில் சிக்கி மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதில், குறிப்பாக மாலை நேரங்களில் 4 மணி முதல் 5 மணி வரை பள்ளிகள் விடுவதால் ஒட்டுமொத்தமாக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பேருந்துக்காக பள்ளி கூடத்தை விட்டு வெளியே வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைகளில் ஆங்காங்கே நிற்கும் ஷேர் ஆட்டோக்கள்,  டூவீலர்களால், நான்கு சக்கரம் மற்றும் இதர வாகனங்களால்  கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால்,  மாணவர்கள் விரைவாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற துடிப்பில் சில நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலை உருவாகிறது. இங்கு, மாலை நேரங்களில் போக்குவரத்தை கட்டுப்படுத்த போதுமான போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு போலீசாரும் நியமித்து போக்குவரத்தை சீர்ப்படுத்தவில்லை.

இதில், பள்ளி விடும் நேரங்களில் அரசு பேருந்துகளும் சரிவர இயக்கப்படுவதில்லை. இதனால், 4  மணி முதல் மாலை 7 மணி வரை பழைய மற்றும் புதிய  பேருந்து நிலையத்திலேயே கால் கடக்க நின்று பயணிக்கும் அவல நிலை தொடர்கிறது. இதுகுறித்து பெற்றோர் மற்றும்  சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘காலை, மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு செல்வதாலும், பள்ளியிலிருந்து வீடுகளுக்கு செல்வதாலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி மாவட்ட எஸ்.பி   கவனம் செலுத்தி போதுமான காவலர்களை நியமித்து போக்குவரத்தினை  கட்டுப்படுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிற்கும் ஷேர் ஆட்டோக்களை அப்புறப்படுத்த வேண்டும், குறிப்பாக  செங்கல்பட்டு பணிமனையில் இருந்து தேவையான கூடுதல் பேருந்துகளை மாணவர்கள் செல்வதற்கு இயக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்’என்றனர்.

Related Stories: