×

சக வீரர்களே இனவெறி தாக்குதல்... டெய்லர் வேதனை

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓய்வு பெற்ற நியூசிலாந்து அணி முன்னாள் கேப்டன்  ராஸ் டெய்லர், தனது சுயசரிதையை ‘ராஸ் டெய்லர் பிளாக் அண்டு ஒயிட்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில் சக வீரர்களாலேயே இனவெறிக்கு ஆளானதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: நியூசிலாந்தில் கிரிக்கெட் என்பது அழகான வெள்ளைக்காரர்களின்  விளையாட்டு. அவர்களுக்கு இடையில் நான் பழுப்பு முகமாக இருந்தேன். தடிமனான தோலை நகையாடுவது எளிது. ஆனால், அது சரியான செயலா? உடை மாற்றும் அறைகள் கேலியின் பண்டமாற்று கடைகள் போல் இருந்தன. நியூசி. மக்கள் என்னை மவோரி அல்லது இந்தியன் என்று நினைத்தனர். ஒருமுறை நியூசி வீரர் ஒருவர் என்னைப் பார்த்து, ‘நீங்கள் பாதி நல்லவர். ஆனால் ராஸ் நான் எந்த பாதியை குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு தெரியவில்லை’ என்றார்.

நான் பாதி வெள்ளை இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னை பாதி நல்லவர் என்று குறிப்பிடுவது புரிந்தது. கேலி செய்கிறார்கள் என்று தெரிந்தாலும் அவர்களை திருத்த முயன்றதில்லை. அந்த நேரங்களில் உணர்ச்சியவற்றவன் போல் இருந்திருக்கிறேன்’ என்று தனது வேதனை  அனுபவங்களை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட்டில் அதிரடி காட்டிய, ஆட்டமிழந்தால் அடாவடி  செய்யாமல் அமைதியாக வெளியேறும் ‘ஜென்டில்மேன்’ ராஸ் டெய்லர் இப்படி இனவெறி தாக்குதலுக்கு ஆளானது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. அவரது இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூசி. கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Tags : Taylor , Racist attack by teammates... Taylor's agony
× RELATED டெய்லர் தூக்கிட்டு தற்கொலை