கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நிலக்கரி கடத்தல் வழக்கில் 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த நிலக்கரி கடத்தல் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிகளான ஞானவந்த் சிங், கோட்டேஸ்வர ராவ், செல்வமுருகன், ஷியாம் சிங், ராஜீவ் மிஸ்ரா, சுகேஷ் குமார் ஜெயின் மற்றும் ததாகதா பாசு ஆகியோர் உட்பட 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இவர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த ஆண்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன் பிறகு இது கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், மேற்கண்ட 7 பேர் உட்பட 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளும் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த ஐபிஎஸ் அதிகாரிகள் நிலக்கரி கடத்தல் வழக்கில் முக்கிய பங்கு வகித்தனர். ஆதாயம் பெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன,’ என்று தெரிவித்தார்.