சர்வதேச போட்டிகள் நடத்த வாய்ப்புகள் வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் டிவிட்டரில் பாராட்டு தெரிவித்து இருந்தார். அதில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும், அரசும் மிக சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்குபெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுகள் என தெரிவித்து இருந்தார்.

பிரதமரின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியுள்ளதாவது: உங்கள் அன்பான பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு குணங்கள். இது போன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த தமிழகத்திற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று உங்கள் நிலையான ஆதரவை நான் கோருகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: