சென்னை: அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.அப்போது, வழக்குகளை ரத்து செய்யக் கோரி குற்றவியல் பிரிவில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வேலுமணி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.