சென்னை: இன்ஜினியரிங் கல்லூரிகளில் அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சுமார் 11 ஆயிரம் சீட்டுகள் மட்டுமே உள்ள நிலையில், 22 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 1.5 லட்சம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியாக 2 லட்சத்து 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இதில் இடஒதுக்கீட்டின் கீழ் 22 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களுக்கு கட்-அப் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்படும்.