போதைப் பொருள் கொடுத்து அடிமையாக்கி 20 பள்ளி மாணவிகள் பலாத்காரம்: கேரளாவில் 9ம் வகுப்பு மாணவன் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் போதைப் பொருள் கொடுத்து அடிமையாக்கி 20க்கும் அதிகமான பள்ளி மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 9ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். கேரளாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் மிகவும் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் மட்டுமல்லாமல் மாணவிகளும் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கஞ்சா, கொகைன், எம்டிஎம்ஏ உள்பட போதைப் பொருட்கள் கேரளாவுக்கு பெருமளவு கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுப்பதற்காக போலீசார், கலால் துறையினர் மற்றும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற போதிலும் எந்த பலனும் ஏற்படவில்லை.

இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் பள்ளி மாணவிகளை போதைக்கு அடிமையாக்கி 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சக மாணவனே பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூர் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது: வெளி மாநிலத்தில் படித்து வந்த ஒரு 9ம் வகுப்பு மாணவி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் இந்த பள்ளியில் சேர்ந்துள்ளார். அவருடன் ஒன்றாக ஒரே வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன் அந்த மாணவியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளான்.

அந்த மாணவியின் வீட்டுக்கும் அடிக்கடி சென்று மிகக் குறுகிய காலத்திலேயே அந்த மாணவன் சக மாணவியின் பெற்றோரின் நற்பெயரையும் சம்பாதித்துள்ளான். இதற்கிடையே வெளி மாநிலத்திலிருந்து கேரளாவுக்கு வந்திருந்ததாலும், புதிய பள்ளியில் சேர்ந்ததாலும் அந்த மாணவி மனதளவில் சற்று பாதிப்பில் இருந்தார்.

இதை தெரிந்து கொண்ட அந்த மாணவன், மாணவிக்கு போதைப் பொருளை கொடுத்து அதை பயன்படுத்தினால் மனதில் உற்சாகம் பிறக்கும் என்று கூறியுள்ளான். அந்த மாணவியும் போதைப் பொருளை பயன்படுத்த தொடங்கினார்.

நாளடைவில் அந்த மாணவி போதைக்கு அடிமையானார். தினமும் போதைப்பொருள் இல்லாமல் அவரால் தூங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மாணவன், மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்யத் தொடங்கினான். அது மட்டுமல்லாமல் மாணவியை பலாத்காரம் செய்வதையும்,  தன்னுடைய செல்போனில் பதிவு செய்தான்.

இந்நிலையில் அந்த மாணவனின் செல்போனில் இருந்த அந்த காட்சிகளை மாணவியின் பெற்றோர் தற்செயலாக பார்க்கும் சூழல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக அந்த மாணவியை வயநாட்டிலுள்ள போதைப்பொருள் மீட்பு மையத்தில் அனுமதித்தனர். அங்கு இரண்டு வார சிகிச்சைக்குப் பின் அந்த மாணவி உடல்நலம் தேறினார். இதன் பின்னர் அந்த மாணவியின் பெற்றோர் கண்ணூர் டவுன் போலீசில் புகார் செய்தனர்.          

இந்த விசாரணையில் தான் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 9ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன் இதே போல 20க்கும் அதிகமான மாணவிகளுக்கு போதைப் பொருளை கொடுத்து அவர்களை அதற்கு அடிமையாக்கி பலாத்காரம் செய்தும், அடித்து கொடுமைப்படுத்தியும் வந்துள்ளான். இதையடுத்து அந்த மாணவன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே அந்த மாணவனை பள்ளி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது.

போதைப் பொருளுக்கு அடிமையாக்கி 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவனுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: