×

அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்

சென்னை: எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, புகாரில் அடிப்படை முகாந்திரம் இல்லை என அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில் வழக்கை முடிக்க கோரி தமிழக அரசும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து டெண்டர் முறைகேடு தொடர்பாக வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். முந்தைய ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை வேலுமணியிடம் வழங்க உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.பி. வேலுமணி தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அஸத் முகமது ஜின்னா ஆஜராகி, எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், எனவே அந்த விசாரணைக்கு தடை விதிக்க கூடாது எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேநேரத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்பில், இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி, முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட முடியாது என தெரிவித்து எஸ்.பி.வேலுமணி தரப்பில் விடுத்த கோரிக்கையை நிராகரித்தனர். அதேசமயம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவும் முடியாது. ஆனால் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தலாக வழங்கி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : AIADMK ,Minister ,S.P. Ca ,Velumani , SB Velumani, tender malpractice, ICourt
× RELATED அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு...