திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சொன்ன வேலையை செய்யாததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், தனது 6 வயது மகளை அடித்துக் கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன்(37). சாலை அமைக்கும் கூலித்தொழிலாளி. அவரது மனைவி சுகன்யா(30). இவர்களது மகன் பிசன்னதேவ்(8), மகள் ரித்திகா(6). அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் குழந்தைகள் இருவரும் விளையாடிக்ெகாண்டிருந்தனர்.
அப்போது, சமையல் செய்யும் பாத்திரத்தை எடுத்துவரும்படி ரித்திகாவிடம் தாய் சுகன்யா கூறியுள்ளார். அதை கவனிக்காமல் சிறுமி விளையாடிக்கொண்டிருக்கவே ஆத்திரம் அடைந்த சுகன்யா, கரும்பை எடுத்து அடித்துள்ளார். இதில், தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சிறுமி ரித்திகா மயங்கி விழுந்தாள். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே ரித்திகா இறந்தாள். பின்னர் உடலை தாய் வீடான கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூர் கிராமத்துக்கு எடுத்துச்சென்றார். இதுபற்றி பூபாலன் புகாரின்படி வெறையூர் போலீசார் வழக்குப்பதிந்து தாய் சுகன்யாவை கைது செய்தனர்.