கொழும்பு: இந்தியாவின் கடும் எதிர்ப்பையும், இலங்கை அரசின் தடையையும் மீறி சீனாவின் உளவு கப்பல் இன்று இலங்கை வருகிறது. இலங்கைக்கு கடன் கொடுத்தற்காக அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ள சீனா, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், சீன ராணுவத்தின் ‘யுவான் வாங்க்-5’ என்ற உளவுக்கப்பல் அம்பந்தோட்டா துறைமுகத்துக்கு நாளை வந்து வரும் 17ம் தேதி வரை முகாமிட்டு, செயற்கைக்கோள் கண்காணிப்பு, உளவு பணிகளை மேற்கொள்ளும் என தகவல் வெளியானது. இலங்கையில் இருந்து 750 கிமீ சுற்றளவுக்கு இந்த கப்பலால் உளவு பார்க்க முடியும் என்பதால், தமிழகத்தில் உள்ள கல்பாக்கம், கூடங்குளம் அணு மின்நிலையம் உள்ளிட்ட ஆய்வு மையங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கேரள மாநிலங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.