×

போதைப் பொருள் வியாபாரிகளின் மொத்த சொத்துகளும் முடக்கப்படும்: கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் விற்கும் வியாபாரிகள் அனைவரையும் காவல்துறை கைது செய்து, அவர்களது மொத்த சொத்துகளும் முடக்கப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில், போதைப்பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதை மருந்தின் பயன்பாடும், அதற்காக அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதை நினைக்கும்போது கவலையும் வருத்தமும் கூடவே செய்கிறது.

கடந்த ஆட்சியில் இதுபற்றி போதிய கவனம் செலுத்தாமல் விட்டது காரணமாக இந்த சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று சொன்னாலும், நாம் இதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம் என்பது மட்டுமே இப்போது எனக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு ஆறுதல். இந்த அடிப்படையில்தான், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். ஏதேனும் ஒரு திட்டத்தை தொடங்குவதற்காகவோ, சட்டம் -ஒழுங்கு பிரச்னைக்காகவோ இத்தகைய கூட்டு கூட்டத்தை நாம் இதுவரையில் பலமுறை கூட்டியிருக்கிறோம். ஆனால், இன்று போதைப்பொருள் தடுப்புக்காக கூட்டி இருக்கிறோம் என்று சொன்னால், இது வருங்காலத்தில் மாபெரும் பிரச்னையாக மாறிவிடக் கூடாது என்கிற காரணத்தால்தான். இந்த அரங்கத்தில் இருக்கும் அனைவரும், நம் முன்னால் இருக்கும் அழிவுப்பாதையான போதை பாதையை, நமது முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுத்தாக வேண்டும். அதற்கான உறுதியை எடுத்தாக வேண்டும். போதை மருந்துகள், நம் மாநிலத்துக்குள் நுழைவதை தடுத்தாக வேண்டும். அது பரவுவதை தடுத்தாக வேண்டும்.

விற்பனையாவதை தடுத்தாக வேண்டும். பயன்படுத்துவதை தடுத்தாக வேண்டும். பயன்படுத்துபவர்களை அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்தியாக வேண்டும். புதிதாக ஒருவர் கூட இந்த போதை பழக்கத்திற்கு ஆளாகிவிடாமல் முனைப்புடன் இளைஞர் சமுதாயத்தை பாதுகாத்திட வேண்டும். இந்த உறுதியை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களை நம்பி ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒப்படைத்துள்ளேன். நீங்கள்தான் அந்த உறுதியை எனக்கு வழங்க வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தில் குஜராத்தை விட, மகாராஷ்டிராவை விட தமிழகம் குறைவுதான் என்று நான் சமாதானம் அடைய தயாராக இல்லை. ஒரு சிறு துளி இருந்தாலும் போதைப்பொருள் நடமாட்டம் என்பது நடமாட்டம்தான். ஒருவர் அதற்கு அடிமையானாலும் அது அவமானம்தான்.

எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு - போதை போன்ற எதிர்மறையான விஷயங்களில் வளர்ந்துவிடக் கூடாது. வளர விட்டுவிடவும் கூடாது. போதை என்பதை நல்ல பழக்கம், கெட்ட பழக்கம் என்ற பொருளில் நான் சொல்லவில்லை. உடலுக்கு கெடுதியானது போதைப்பொருள். அதனால் கெடுதல்தான் என்ற பொருளில் சொல்கிறேன். போதைப்பொருளை பயன்படுத்துவதற்கு ஏதோ ஒரு காரணம் தேவைப்படுகிறது, அவ்வளவுதான். அந்த காரணத்தில் பொருள் உள்ளதா என்றால் இல்லை. படிப்பு சரியாக வரவில்லை, மனக்கவலை ஏற்படுகிறது, வாழப் பிடிக்கவில்லை - இப்படி எத்தனையோ காரணங்களை சொல்லிக் கொள்கிறார்கள். இவை அனைத்தும் கதைக்கு உதவாத காரணங்கள்தான். கோடிக்கணக்கான மக்கள் தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் மட்டுமே வைத்து வாழும்போது, ஒரு சிலர் மட்டும் அது இல்லாத காரணத்தால் போதையின் பாதையில் தீர்வு கிடைக்கும் என்று சொல்வது கோழைத்தனமே தவிர வேறல்ல. போதை என்பது அதனை பயன்படுத்தும் தனிமனிதரின் பிரச்னை அல்ல. அது சமூகப்பிரச்னை.

போதைப்பொருள் என்பதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம், சமூகத்தில் குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதுதான். ஒருவர் போதையை பயன்படுத்தி விழுந்து கிடப்பதால் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை என்று கேட்கக் கூடாது. போதைப்பொருள் தான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது. இத்தகைய குற்றம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் போதையை பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள் அல்லது போதை மருந்து உட்கொண்ட நிலையில் இக்குற்றத்தினை செய்திருப்பார்கள். போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்தல் என்பது கூட்டு நடவடிக்கை. போதைப்பொருள் பழக்கம் என்பது ஒரு சமூகத் தீமை. ஆகவே இந்த சமூகத் தீமையை நாம் அனைவரும் சேர்ந்துதான் தடுத்தாக வேண்டும்.

* போதை மருந்தை பயன்படுத்துபவர் அதில் இருந்து விடுபட வேண்டும்.

* விடுபட்டவர், போதை பயன்பாட்டுக்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும்.

* பெற்றோர் தங்கள் பிள்ளைகளை போதைப்பொருளை பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும்.

* இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கும் இருக்கிறது.

* இதே பணி, கல்லூரிகளின் நிர்வாகத்திற்கும் இருக்கிறது.

* வியாபாரிகள், கடைக்காரர்களும் போதைப்பொருளை விற்கமாட்டேன் என உறுதி எடுக்க வேண்டும்.

* போதை பொருட்கள், பள்ளி மற்றும் கல்லூரி அருகே விற்பனையாகாமல் கண்காணிக்க வேண்டும்.

* மாவட்ட நிர்வாகமானது, தனது எல்லைக்குள் இப்பொருட்களின் நடமாட்டத்தை தடுத்தாக வேண்டும்.

* காவல் நிர்வாகமானது, போதை பொருட்களை முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும்.

* போதைப்பொருள் விற்கும் வியாபாரிகள் அனைவரையும் காவல்துறை கைது செய்தாக வேண்டும்.

* அவர்களது மொத்த சொத்துகளும் முடக்கப்பட வேண்டும்.

* மாநிலம் விட்டு மாநிலம் கடத்தி வருவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

* போதையின் தீமையை மருத்துவர்கள், குறிப்பாக, மனநல மருத்துவர்கள் பரப்புரை செய்ய வேண்டும்.

* போதையில் விழுந்தவர்களை மீட்கும் பணியை சமூகநல அமைப்புகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் செய்தாக வேண்டும்.

* போதையில் இருந்து மீள்பவர்களுக்கு மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும்.

இவ்வளவு காரியங்களை ஒரு சமூகம் மொத்தமும் செய்தாக வேண்டும். அப்படி ஒருசேர அந்த சமூகம் இயங்கினால்தான், போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்க முடியும்.
இதை நான் சொல்லும்போது உங்களுக்கு மலைப்பாக இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் இதில் ஒரு வேலைதான் இருக்கிறது. அந்த வேலையை ஒழுங்காக செய்தால் போதும். ஆகவே, நீங்கள் இதை தடுப்பதற்கான ஆலோசனைகளை இந்த கூட்டத்தில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு” தேவையான அனைத்து கருத்துகளையும் நீங்கள் இங்கே எடுத்துச் சொல்லலாம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, அரசு துறை செயலாளர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Police Officers Conference ,CM ,K. Stalin , Total assets of drug peddlers will be frozen: Chief Minister M K Stalin warns in Collector, Police officials conference
× RELATED கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை...