பழநி: பழநி தொழிலதிபர்களின் அலுவலகங்களில் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர், திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள முக்கிய தொழிலதிபர்கள், கட்டிட ஒப்பந்ததாரர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் அலுவலகங்களில் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ரூ.25 கோடிக்கு அதிகமாக தொழில் செய்து ஜிஎஸ்டி வரி செலுத்தக்கூடிய தொழிலதிபர்களிடம் ஜிஎஸ்டி வரி முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தனர். 12 சதவீத வரி தற்போது தொழில் நிறுவனங்களுக்கு 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது குறித்தும், வரி செலுத்தினால் கிடைக்கும் சலுகைகள் குறித்தும், வரி செலுத்தாவிட்டால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. 3 கார்களில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்ததால் வருமான வரி சோதனை நடைபெறுவதாக தகவல் பரவியது. இதனால் பழநி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.