மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.40 லட்சம் கனஅடியாக சரிவு

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை துவங்கியதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 1.45 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை  நிலவரப்படி வினாடிக்கு 1.35 கனஅடியாக  சரிந்துள்ளது. இருப்பினும் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளிக்க, பரிசல் இயக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1.44 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 1.45 லட்சம் கனஅடியாக வந்து கொண்டிருந்தது.

இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1.40 லட்சம் கனஅடியாக சரிந்துள்ளது. அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையங்கள் வழியாக 23,000 கனஅடி வீதமும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 1.22 லட்சம் கனஅடி வீதமும் என 1.45 லட்சம் கனஅடி  தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

அணையின் நீர்மட்டம்  25வது நாளாக தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது.  நீர்இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது. அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஜூலை 12ம் தேதி முதல் இன்று வரை மேட்டூர் அணைக்கு 210 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. 150 டிஎம்சி வெள்ள நீர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: