திருமலை : ஆந்திரவில் தற்போது மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை ₹2 ஆக உள்ளது. இந்த திடீர் விலை வீழ்ச்சியால் வேதனையடைந்த விவசாயிகள் மார்க்கெட்டு கொண்டுவந்த தக்காளியை நெடுஞ்சாலையோரம் வீசி சென்றுள்ளனர்.ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு, சிங்கனமலை, கல்யாணதுர்கம் பகுதியில் அதிகளவில் தக்காளி சாகுபடி நடந்து வருகிறது.
இந்நிலையில், ராப்தாடு, கல்யாணதுர்கம், கம்பத்தூர், பேரூர், கனகனப்பள்ளி மண்டலங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று காலை ஆட்டோ டிராலிகளில் தக்காளியை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வந்தனர். தற்போது மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை ₹2 ஆக உள்ளது. இதனால் கட்டுப்படியான விலை கிடைக்காததால் மொத்த வியாபாரிகளை உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்யுமாறு கெஞ்சியும் பலனில்லை. இதனால் விவசாயிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்த டன் கணக்கில் தக்காளியை நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டிவிட்டு சென்றனர்.
கடந்த மாதம் ஒரு குவின்டால் தக்காளி ₹1000க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ₹300 கூட கிடைக்கவில்லை. பல விவசாயிகள் தக்காளி அறுவடை செய்ய கூலி கூட கிட்டாததால் தக்காளியை அப்படியே அறுவடை செய்யாமல் நிறுத்திவிட்டனர். சந்தையில் தக்காளி அதிகளவில் கிடைப்பதால் விலை குறைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அரசு உறுதியளித்தபடி உணவு பதப்படுத்தும் பிரிவு தொடங்குவதன் மூலம் தக்காளியை பாதுகாத்து கெட்ச்அப், சாஸ், சிப்ஸ், ஜூஸ், கூழ் ஆகியவற்றுக்கு எதிர்கால நோக்கங்களுக்காகப் பயன்படுத்த, உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு முன்பு உறுதியளித்தபடி அனந்தபூர் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 4 குளிர்பதன கிடங்குகள் மற்றும் 10 உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.