*விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரை அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கையும் களவுமாக கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 7 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றினர். புதுச்சேரி, வாணரப்பேட்டை, தமிழ்த்தாய் நகர், னிவாச படையாச்சி வீதியை சேர்ந்தவர் வேதநாயகம் (40). தனியார் ஊழியரான இவர் நேற்று முன்தினம் புதுச்சேரி, லால் பகதூர் சாஸ்திரி வீதியில் தனது பைக்கை நிறுத்தி விட்டு நடைபயிற்சிக்காக கடற்கரை சாலைக்கு சென்றிருந்தார்.
பின்னர் சிறிதுநேரத்தில் வந்து பார்த்தபோது அவரது வண்டியை 3 பேர் தள்ளிக் கொண்டு செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்த வேதநாயகம் கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர், அங்கு ரோந்துப் பணியிலிருந்த பீட் காவலர்கள் ஓடிவந்து பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். பின்னர் ஒதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், எஸ்ஐ முருகன் தலைமையிலான போலீசார், சம்பவ இடம் விரைந்து வந்து திருட்டு பைக்கை கைப்பற்றி 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தங்கள் பாணியில் அதிரடியாக விசாரித்தனர். விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுகா, அருணாபுரம், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த முத்து (19), அருணாபுரம், முருகன் கோயில் தெருவை சேர்ந்த சத்ய பாலன் (20), திருக்கோவிலூர் தாலுகா, சு.பில்ராம்பட்டு, அன்னை தெரசா வீதி சதீஷ்குமார் (21) என்பதும், புதுச்சேரி கடற்கரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மேலும் 6 பைக்குகளை இதேபோல் திருடியிருப்பதும் தெரியவந்தது. தகவலின்பேரில் திருவண்ணாமலை விரைந்த தனிப்படையினர் அங்கு பதுக்கி வைத்திருந்த மேலும் 6 திருட்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர். இதில் 4 வண்டிகள் ஒதியஞ்சாலை காவல் சரகத்திலும், 3 பைக்குகள் பெரியகடை காவல் பகுதியிலும் திருடியிருப்பது அம்பலமானது. பின்னர் 3 பேரும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.