புதுச்சேரி கன்னியகோயில் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற நெய்வேலியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் கைது-6.5 கிலோ பறிமுதல்: பொறி வைத்து பிடித்த போலீஸ்

பாகூர் :  பாகூர், கன்னியகோவில் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை  செய்த நெய்வேலியை சேர்ந்த 6 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது  செய்தனர். அவர்களிடமிருந்து 6.5 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல்  செய்துள்ளனர்.  புதுச்சேரி, பாகூர் அடுத்த கன்னியகோவில் ரோட்டில் உள்ள  ஒரு தனியார் கல்லூரி அருகே கஞ்சா புழக்கம் அதிகளவில் இருப்பதாக தெற்கு  எஸ்பி அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்பி விஷ்ணுகுமார்  உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கணேஷ் மேற்பார்வையில் எஸ்ஐ நந்தகுமார்  தலைமையிலான போலீசார்,  அப்பகுதியில் மப்டி உடையில் ரோந்துப் பணியில்  ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்ற 3 பேரை  சுற்றிவளைத்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். முன்னுக்குப்பின்  முரணாக பதிலளிக்கவே அவர்களை போலீசார் சோதனையிட்டனர்.  அப்போது 300 கிராம்  கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.  இதையடுத்து   கஞ்சாவை பறிமுதல் செய்து  காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

  கஞ்சா விற்றது, நெய்வேலி இந்திரா நகர் சூர்யா (23), நெய்வேலி டவுன்ஷிப்  வசந்த் (21), நெய்வேலி சக்தி நகர் ஜெர்வீஸ் (23) என்பதும், இவர்கள் பள்ளி,  கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய அவற்றை பொட்டலமாக எடுத்து  வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை மொத்தமாக  சப்ளை செய்தது நெய்வேலி பிளாக்-29 பகுதியில் குடியிருக்கும் பிரதாப் மோகன்  (26) என்பதும் அம்பலமானது. பிடிபட்ட 3  பேர் மூலமாக செல்போனில் பிரதாப் மோகனிடம் பேசவைத்த போலீசார்,  புதுச்சேரிக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருப்பதாகவும்,  கஞ்சா அதிக விலை போவதால் உடனே கூடுதலாக கஞ்சா தேவைப்படுவதாகவும் கூற  வைத்தனர்.

மேலும் அவரை பாகூர் சோரியாங்குப்பம் அருகிலுள்ள ஒயின் ஷாப்  ஒட்டிய மறைவான பகுதிக்கு வருமாறு 3 பேர் மூலமாக தகவல் கொடுத்தனர்.  அடுத்த  சிலமணி நேரத்தில் தனது கூட்டாளிகள் 2 பேருடன் பிரதாப் மோகன் விலையுயர்ந்த  பைக்கில் சுற்றுலா பயணிகள் போர்வையில் அங்கு வந்திறங்கினார். இதையடுத்து  தயாராக பதுங்கியிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர்.

  பின்னர் அவர்கள் வைத்திருந்த சூட்கேசை சோதனையிட்டபோது அதில் 6 கிலோ 200  கிராம் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.  மேலும் எடை மிஷன்,  பொட்டலம் போடுகிற இயந்திரம், கேரி பேக்குகள் உள்ளிட்டவையும் இருந்தன.  அவற்றை வண்டியுடன் கைப்பற்றிய போலீசார்,அவர்கள் 3 பேரையும் பாகூர் காவல் நிலையம்  அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது பிரதாப் மோகனுடன் பிடிபட்டது  நெய்வேலி டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த பிடெக் பட்டதாரியான கோபால் என்ற  கோபாலகிருஷ்ணன் (22), நெய்வேலி பிளாக்-21ல் வசிக்கும் புதுச்சேரி தனியார்  பொறியியல் கல்லூரி 2ம் ஆண்டு மாணவரான சந்துரு என்ற தீபராஜ் (23) என்பதும்  தெரியவந்தது.

நெய்வேலியை சேர்ந்த இவர்கள் 6 பேரும் ஒருவருக்கொருவர்  தங்களது நண்பர்கள் மூலம் அறிமுகமாகி சமீபகாலமாக கஞ்சா விற்பனையில் கூட்டாக  ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து ரூ.6 லட்சம் மதிப்பிலான   6 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றிய போலீசார், கஞ்சா கும்பலிடமிருந்த  விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள், செல்போன், எடை மிஷன் ஆகியவற்றை பறிமுதல்  செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு  காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பாக செயல்பட்டு கஞ்சா  கும்பலை பிடித்த காவலர்களை தெற்கு எஸ்பி விஷ்ணுகுமார் பாராட்டினார்.

Related Stories: